கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் வரை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்ற நிலையை மாற்றி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி பள்ளிகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக கொரோனா ஒழிப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த தொற்றுநோயியல் மருத்துவர் ஜெயபிரகாஷ் முளியில் தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை கண்காணிக்கும் ‘ஸீரோ ஸர்வேலன்ஸ்’ மற்றும் மரபணு வரிசைமுறையை அறியும் ஆய்வுகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

டாக்டர். ஜெயபிரகாஷ் முளியில்

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை, நோயாளிகள் இதுவரையிலும் மருத்துவமனைக்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

வைரஸ் பாதிப்பு அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது, குழந்தைகளுக்கும் நோயெதிர்ப்பு சக்தி ஆற்றல் பெற்றிருக்கிறது, இதன்மூலம் குழந்தைகளுக்கும் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றே ‘ஸீரோ சர்வே’ கூறுகிறது.

இந்த பாதிப்பு ஏதாவது விபரீதமான உருமாற்றம் பெறும்போது குழந்தைகளை மேலும் பாதிக்கக்கூடும், அதுவரை வேறு எந்த பெரிய பாதிப்பும் இருக்காது.

அப்படி ஏதாவது உருமாற்றம் பெற்றால் மூன்றாவது அலையிலும் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான தடுப்பூசியை செலுத்தி உயர்வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு உரிய தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்புடன் வகுப்புகளை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் மீறி, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை தாமதமின்றி உடனே எடுக்கவேண்டும், மாறாக கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கிய பிறகு தான் மக்களின் இயல்புவாழ்க்கை துவங்க வேண்டும் என்று காத்திருக்க முடியாது என்று கூறினார்.

நோயெதிரிப்பு ஆற்றல் குறித்த விவரங்களை அறிய பாதிப்பு குறைவாக இருக்கும் இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை கண்காணிக்கும் ‘ஸீரோ ஸர்வேலன்ஸ்’ மற்றும் மரபணு வரிசைமுறையை அறியும் ஆய்வுகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று அந்த பேட்டியில் டாக்டர். ஜெயபிரகாஷ் முளியில் தெரிவித்துள்ளார்.