சென்னை

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 24 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தம்மை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது .

அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  பதில் மனுவில்,

“வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கைத் தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் ”

என்று தெரிவிக்கப்பட்டது.

செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைக்க வேண்டும் என கோரியதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை 3 மாதங்களில் முடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறி விசாரணையை 6-ந் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கைத் தினமும் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க அவகாசம் அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகச் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவை 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், வருகிற 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 24-ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.