சென்னை: சேலத்தில் உள்ள 90ஆண்டு பழமையான மாடர்ன் தியேட்டர்ஸ் இடம் கருணாநிதி சிலை வைக்க அபகரிக்கப்பட இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ”மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்து வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை”  என்றும், அந்த நிலம் நெடுஞ்சாலை துறை நிலத்திலேயே அமைந்துள்ளது அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக திரை உலகின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் திகழ்ந்து வந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே. இந்த நிறுவனத்தின் நுழைவாயிலை இடித்து மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக அந்த இடத்தைக் கேட்டு அரசுத் தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் எ.வ. வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன.

இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது, மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் சேலம் – ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8இல் உள்ளது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், 2.12.2023 அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த முகப்பை பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது.

இவ்வாறு கூறி உள்ளார்.

கருணாநிதி சிலை வைக்க 90ஆண்டு கால மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி! குடும்பத்தினர் அலறல்..

சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்