புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம்
சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் (Fort St. George) இயங்கி வரும் தமிழக தலைமைச் செயலகத்தை, நகரின் மையப் பகுதியைத் தாண்டி புதிய இடத்துக்கு மாற்ற தமிழக அரசு ஆலோசித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தற்போது கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்துக்கு இடம் மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது குறித்து முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் பட்டினப்பாக்கம் (Foreshore Estate) மற்றும் கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம் (Highways Research Station Campus) ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த இடங்களில் முதலமைச்சருக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “தற்போதைய தலைமைச் செயலக வளாகத்தில் இடப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. கோட்டை பாரம்பரியக் கட்டடமாக இருப்பதாலும், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் புதிய கட்டடங்கள் கட்டுவதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை” என்றனர்.
இதனிடையே, “நிதித்துறை உள்ளிட்ட சில துறைகளின் அலுவலகங்கள் மிகவும் நெருக்கடியாக உள்ளன. ஊழியர்கள் சுதந்திரமாக நடமாடக்கூட இடவசதி இல்லை” என்று தலைமைச் செயலக ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
புனித ஜார்ஜ் கோட்டை – ஒரு பார்வை
- 1644: இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டையாக புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
- 1947: இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழக அரசின் தலைமைச் செயலகமாக செயல்படத் தொடங்கியது.
- 2010: தி.மு.க. ஆட்சியில் ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகம் திறக்கப்பட்டது.
- 2011: அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றி, தலைமைச் செயலகத்தை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார்.
- தற்போது, புதிய தலைமைச் செயலகத்துக்கான மாற்று இடங்களாக பட்டினப்பாக்கம் மற்றும் கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம் ஆகியவை மீண்டும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.