சென்னை: “காங்கிரஸை விட்டு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் போய் இருக்கிறார்கள். அதனால் விஜயதாரணி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவான விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரதமர் மோடியின் அடுத்த தமிழக வருகையின்போது, அவர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாகவும், இதையடுத்து, அவருக்கு குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில், போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தனது பாணியில் கிண்டலாக சிறித்துகொண்டே பதில் அளித்தவர். பதிலளித்தவர், முதலில், “இல்லைங்க.. எனக்கு தெரியாது. நானே பத்திரிகைகளில் படித்து தான் இதுபற்றி தெரிந்து கொண்டேன். ஆனால், விஜயதாரணியிடம் இதுபற்றி கேட்ட போதும் கூட, அவரும் இந்த செய்தியை மறுக்கவில்லை எனக் கூறியிருக்கிறார்.
அதனால் அவர் கட்சியில் இருப்பாரோ போவாரா என்று தெரியவில்லை. அப்படி ஒரு வேளை, விஜயதாரணி போனாலும் கட்சிக்கு பாதிப்பு இல்லை. காங்கிரஸை விட்டு பெரிய பெரிய ஆட்களே போய் இருக்கிறார்கள். ராஜாஜி போய் இருக்கிறார். எத்தனையோ பேர் போய் இருக்கிறார்கள். அதனால் இவர் போவதால் கட்சிக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்படாது” என ஈ கூறினார்.
தமிழக காங்கிரஸில் நீண்டகாலமாக செயல்பட்டு வருபவர் விஜயதாரணி. இவருக்கும் கட்சி தலைமைக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கிறார். விஜயதாரணி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த சூழலில், தற்போது அவர் பாஜகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வற்ற தகவல்கள் பரவி வருகின்றன. அதுவும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் அவர் இணையப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறத.
இதுதொடர்பாக விஜயதாரணியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூற மறுத்ததுடன், மழுப்பலாகவே பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜகவின் வலையில் விஜயதாரணி சிக்க மாட்டார் என உறுதிப்படக் கூறி உள்ளார்.