ஊட்டி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஊட்டியில் வாக்கு இயந்திரம் வைக்கும் இடத்தில் சிசிடிவி செயலிழப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது   இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

அங்கு 180கண்காணிப்பு  படக்கருவிகள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை திடீரெனக் கண்காணிப்பு படக்கருவி காட்சிகள் டி.வி. திரையில் தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முகவர்கள், உடனடியாக தொழில்நுட்ப பிரிவு அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் விரைந்து வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு வழக்கம்போல் கண்காணிப்பு கேமரா காட்சிகள் டி.வி.யில் தெரிய ஆரம்பித்தது.

இது குறித்து நீலகிரி ஆட்சியர் அருணா,

“அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு படக்கருவிகளும் செயல் இழந்துவிட்டது. எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. எந்த சந்தேகமும் தேவையில்லை. சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்டத் தயாராக இருக்கிறோம்.’

என்று தெரிவித்துள்ளார்.