மஜிதா:

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 4ம் தேதி நடக்கிறது. இதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதாவும் களத்தில் உள்ளன.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மஜிதா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அம்ரிந்தர் சிங் முதல்வராக தேர்வு செய்யப்படுவார்” என்று கூறினார்.

முன்னதாக ஆளுங்கட்சியான எஸ்.ஏ.டி.யும், ஆம் ஆத்மியும், அம்ரிந்தர் சிங்கை ஏன் கட்சியின் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தவில்லை என்று கேலி செய்தன. இப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.