சென்னை:  குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக  அதிமுக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந் நிலையில், குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக  ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்து உள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், கடலூர் மத்திய மாவட்டம், (156) குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கடவார் கிழக்கு மாவட்ட மகளிர் அனரித் செயலாளர் முன்னாள் அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில், பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஜான்தங்கம் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஜான்தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.