சென்னை: ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கில்,  செறிவூட்டப்பட்ட அரிசி  குறித்து, அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் எப்படி விநியோகம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்தியஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 18.64 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ பயனாளர்கள், 96.12 லட்சம் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள், 1.1 கோடி முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க  மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடைகள், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழும் இந்த அரிசி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில்  ஏற்கனவே விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள 5.51 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’, முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி ஏற்கெனவே வழங்கப்பட்டுவருகிறது.  தமிழ்நாட்டில் சுமார் 18.64 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ பயனாளர்கள், 96.12 லட்சம் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள், 1.1 கோடி முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நீட்டிக்கத் தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

இந்த நிலையில்தான்,  உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி கடலூர் மாவட்டம், முருகன்குடியைச் சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்டப்படி, தலசீமியா, ரத்தசோகை உள்ளவர்கள் இரும்புச் சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ணும் போது, பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல, தலசீமியா, அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என அரிசி பையில், எச்சரிக்கை வாசகம் இடம்பெறாமல் விநியோகிக்கப்படுவதாக கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும், தலசீமியா, அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என்று விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதால், பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்யத் தேவையில்லை என்றார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், எந்த அறிவியல் ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும். இந்த அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள். இது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

செறிவூட்டுதல் அரிசி என்பது என்ன?

‘நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்தும் வகையில், தேவையான நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தைத் திட்டமிட்ட வகையில் அதிகரிப்பதே’ செறிவூட்டல் என இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) வரையறை செய்துள்ளது. இந்த அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்படும்.

வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல நுண்ணூட்டச் சத்துப்பொருள்கள் கொண்ட செயற்கையான செறிவூட்டும் கலவை (பிரிமிக்ஸ்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலவையும், மாவாக்கப்பட்ட அரிசியும் சேர்க்கப்படும். பிறகு, இந்த மாவு அரிசி வடிவில் மீண்டும் இயந்திரங்களில் வார்த்தெடுக்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 100:1 என்ற விகிதத்தில் இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் கலக்கப்படுகின்றன.

இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கு 2020 முதல் 2022ஆம் ஆண்டுவரை 112 மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டு, மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், எல்லா மாநிலங்களிலும் பொது விநியோக முறை, மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட அரசு சார்ந்த திட்டங்கள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை (Fortified rice) வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அறிவியல் ரீதியிலான உண்மைகள்:

ரத்தசோகை பிரச்சினைக்கான தீர்வு என்கிற அடிப்படையில், இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைச் சென்றடையும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கட்டாயமாக வழங்குவது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தானியங்களில் இரும்புச் சத்தைச் செறிவூட்டுவது உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பைக் கணிசமாக அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல்,

ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தாது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை அழித்து பாக்டீரியத் தொற்று எளிதில் ஏற்படவும் இரும்புச்சத்து வழிவகுக்கும்.

உடலில் இரும்புச்சத்து அதிகரித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் சாத்தியமுள்ளது.

லக அளவில் தலசீமியா நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோல் ரத்த சோகையின் தீவிரமான பிரச்சினைகளில் ஒன்றான, அரிவாள் உயிரணுச் சோகையால் (Sickle cell anaemia) பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட உணவால் ஏற்கெனவே உள்ள பாதிப்புகள் இவர்களுக்கு அதிகரிக்கும்.

இத்தகைய பிரச்சினைகளை ஒப்புக்கொள்ளும் அரசாங்க அதிகாரிகள், குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு வகை சார்ந்த பைகளில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறித்துவிட்டால், தீய விளைவுகளைத் தவிர்த்து விடலாம் என்கின்றனர்.

போதிய கல்வியறிவும் விழிப்புணர்வும் இல்லாதவர்கள் நிறைந்த நாட்டில், இந்த எச்சரிக்கை வாசகங்களால் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த இயலாது என்பதே உண்மை.

பொது விநியோகத் திட்டம் மூலம் இந்த அரிசியை ஏற்கெனவே பெற்றுள்ள மக்கள், இந்த அரிசியை வேகவைக்கும் முன் தண்ணீர் ஊற்றிக் களைந்தால், அரிசி தண்ணீரில் மிதப்பதாகவும், வழக்கமான முறையில் வேகவைக்க முடியவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகை, பிளாஸ்டிக் அரிசி என்று குற்றஞ்சாட்டப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியும் அந்த வகையில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான்.

விழிப்புணர்வுப் பிரச்சாரம்:

 செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் குறித்து மக்களிடையே அரசாங்கம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. எந்த அறிவியல்பூர்வத் தொடர் ஆய்வுகளும் இல்லாமல், பொது விநியோக முறையில், செறிவூட்டப்பட்ட அரிசியைக் கண்மூடித்தனமாக வழங்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மூன்று வருட கால மாதிரி ஆய்வுகளில் கிடைத்த தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

அப்போதுதான் இந்தத் திட்டத்தின் சாதக, பாதக அம்சங்களைத் துறைசார் நிபுணர்களும் மக்களும் முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதேபோல் இதுதொடர்பாக, மக்கள் மத்தியில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதன்பிறகு மருத்துவ, ஊட்டச்சத்து நிபுணர்களின் முறையான ஆய்வுத் தரவுகள் அடிப்படையில் இந்தத் திட்டத்தை மாற்றியமைத்து செயல்படுத்த முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.