சென்னை: மேம்பால கட்டுமான பணி காரணமாக சென்னை தியாகராயநகர் பகுதியில்  இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து  போலீசார் அறிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளதால், நாளை (சனிக்கிழமை) அடுத்த ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தியாகராயநகர் பேருந்து நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள், உஸ்மான் சாலை மேம்பாலத்துக்குப் பதிலாக, மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் பிரகாசம் சாலை வழியாக செல்லலாம்

தியாகராயநகரில் இருந்து சைதாப்பேட்டை மற்றும் அண்ணா சாலைக்கு செல்ல, சிஐடி நகர் 4-ஆவது மற்றும் 3-ஆவது பிரதான சாலையைப் பயன்படுத்தலாம்.

தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய, மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்கிட் சாலை – மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து, மேட்லி நோக்கிச் செல்ல பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூசா தெரு, மன்னார் தெரு வழியாக தியாகராயநகரை அடையலாம்

சி.ஐ.டி. நகர் 1-வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று, வெங்கட் நாராயணா சாலை, நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலைக்கு செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.