திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு,  ரூ.300 கட்டணத்தில் 2.50 லட்சம் டிக்கெட்கள் திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது.

வைஷ்ணவர்களின் முக்கிய விரத நாளான வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் ஏகாதசி அன்று வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அன்று  அனைத்து பெருமாள்கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த  நிகழ்வில் பங்கேற்றால் அனைத்து பாவங்களும் நீங்கி வைகுண்டம் அடையலாம் என்பது ஐதீகம்.

இதையொட்டி,  திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல்  திறந்திருக்கும்.

வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதையொட்டி பல லட்சம் பக்தர்கள் திருப்பதியில் குவிவார்கள் என்பதால், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களுக்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.

ஏற்கனவே நிலையில்,  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசன டிக்கெட்  வழங்கும் ஆன்லைன் புக்கிங் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று ரூ.300 டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.  சுமார் இரண்டரை லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 25ஆயிரம் பேர்  என்ற எண்ணிக்கையில் இன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்கிறது. இந்த டிக்கெட்டுகள் விற்பனை இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.10ஆயிரம் நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி டிக்கெட் ஃபிரி… ! திருப்பதி தேவஸ்தானம்