திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் இன்று 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது. இவ்வாறு நன்கொடை கொடுப்பவர்களுக்கு ரூ.500 விஐபி டிக்கெட் ஃபிரியாக வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

வைஷ்ணவர்களின் முக்கிய விரத நாளான வைகுண்ட ஏகாதசி, பெருமாள் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பங்கேற்றால் அனைத்து பாவங்களும் நீங்கி வைகுண்டம் அடையலாம் என்பது ஐதீகம். அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்படுகிறது.

இந்த நிலையில்,  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசன டிக்கெட் ஒன்று வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 25000 பேர் என்ற எண்ணிக்கையில் இன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்கிறது.

மேலும், சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்காக மட்டும் 5 லட்சம் தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50,000 டோக்கன்கள் என்ற அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதே போல் 2.5 லட்சத்திற்கும் அதிகமான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களும் ஒதுக்கப்பட உள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 25,000 டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்வ தரிசனத்திற்கான டோக்கன்கள் திருப்பதியில் மட்டுமே பெற முடியும். இதனால் கூட்டத்தை முறையாக கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், தேவையற்ற கூட்ட நெரிசலையும் தவிர்க்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி சமயத்தில் திருப்பதிக்கு பக்தர்கள் வர எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதே சமயம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசனம் சர்வ தரிசனத்திற்கான டோக்கன்களை ஜனவரி 1 ம் தேதி முதல், அதற்காக ஒதுக்கப்பட்ட கவுன்ட்டர்களில் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். 5 லட்சம் டோக்கன்கள் முடியும் வரை எல்லா சமயத்திலும் டோக்கன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக சோதனை முயற்சியாக டிசம்பர் 1 ம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசன நேரம் காலை 5.30 மணிக்கு பதிலாக 7.30 மற்றும் 8 மணி என மாற்றப்பட்டுள்ளது.