சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்  2வது கட்ட  பட்டியலை வெளியிட்டார் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.  “இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்”  என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நேற்று அனைத்து அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனியாண்டி ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தேர்தல் தேதி குறித்து, ஜனவரி 22ந்தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வெற்றி வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே கடந்த வாரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது 2வது கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில், சென்னை, மதுரை, ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் போட்டியிடுவோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,  “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட இருக்கும் வெற்றி வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை வெளியிடுகிறேன்.தகுதி மிக்க இவர்களைத் தலைவர்களாக்குங்கள்.வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! கமல்ஹாசன் வெளியீடு…