கோவை

தமிழக அரசுக்கு டாஸ்மாக் மதுக்கூடங்கள் மூலம் மாதந்தோறும் கூடுதலாக ரூ. 12 கோடி கிடைப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

நேற்று தமிழக சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு உதவித் தொகை மற்றும் தங்கக் காசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம், “இன்று கோவையில் ரூ.21.65 கோடி மதிப்பில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தில் 2,800 மகளிர் பயன் பெற்றுள்ளனர்.   ஒரே நாளில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் 39 இடங்களில் ரூ.24 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   தமிழ்நாடு முழுவதும் 8,905 மின்மாற்றிகள் புதியதாக அமைக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டது.   முதல்வர் ரூ.625 கோடி நிதியை இதற்காக ஒதுக்கியதைத் தொடர்ந்து, 8 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 30 நாட்களுக்குள் மீதமுள்ளவையும் அமைக்கப்பட்டுவிடும்.

முந்தைய ஆட்சியில், டாஸ்மாக் மதுக்கூடம் ஏலம் மூலம் மாதத்துக்கு ரூ.16 கோடி தான் வருவாய் வந்தது. ஆனால் தற்போது மாதத்துக்குக் கூடுதலாக ரூ.12 கோடி என மொத்தம் ரூ.28 கோடி வருகிறது. கடந்த ஆட்சியில் ஏலத்தில் 6,400 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், தற்போது 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.” என தெரிவித்தார்.