சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேதிகள் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள், தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். முதல் பட்டியலில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் 47 பேர் கொண்ட மவேட்பாளர் பட்டியல் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனால் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி’ என்பது  மக்கள் நீதி மய்யம் பயணிக்கும் பாதை. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி,  மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உலகத்தரத்தில்  ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனும் லட்சிய தாகம் நமக்கு உண்டு.  கிராம சபைகளாகட்டும், உள்ளாட்சித் தேர்தலை காலம் தாழ்த்தாமல் நடத்த வலியுறுத்துவதாகட்டும், முந்திக்கொண்டு ஒலிக்கும் குரலும் முன்சென்று களம்  காணும் கரங்களும் நம்முடையவைதான்.

ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி சட்டத்தை நிறைவேற்றுவது; மக்களுக்குத் தடையற்ற சேவைகளை உறுதி செய்ய,  ஸ்மார்ட்போன்கள் மூலம் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் ஆன்லைன் மயமாக்குதல்; மழை வெள்ளத்தின் தாக்கத்தைத் தடுக்க, சிங்கப்பூரில் இருப்பது  போல் சர்வதேச தரத்திலான நிரந்தரத் தீர்வு; சென்னையின் வெள்ளப்  பிரச்சினைக்குத் தீர்வு; ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து உள்ளாட்சி  அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவது; நகர்ப்புற  தன்னாட்சி அமைப்புகளில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வார்டு கமிட்டிகள் மற்றும் ஏரியா சபைகள், ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான துரித நிர்வாகம்  உள்ளிட்ட எண்ணற்ற தனித்துவம் மிக்க செயல்திட்டங்களை நாம் நமது தேர்தல்  அறிக்கையாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

விரைவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற,  சட்டமன்ற தேர்தல்களில் நகர்ப்புறங்களில் நாம் கணிசமான வாக்குகளைப்  பெற்றுள்ளோம். ஊழலிலும் லஞ்சத்திலும் திளைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு  நேர்மையும் திறமையும் வாய்ந்த உறுப்பினர்கள் கிடைக்கமாட்டார்களா எனும்  ஆதங்கம் தமிழக மக்களிடம் இருக்கிறது. பல ஆண்டுகளாகக் கதறியும்  தீர்க்கப்படாத பிரச்சனைகள் தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் தெருவிலும்  இருக்கின்றன.

தேர்தலில் வென்று அவற்றைத் தீர்த்தாக வேண்டிய கடமையும்,  பொறுப்பும் நமக்கு இருக்கின்றன. வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் தகுதிசால் வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை இன்று  வெளியிடுகிறேன். வேட்பாளர்கள் இக்கணம் முதல் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஒவ்வொரு வாக்காளரிடமும் நமது கொள்கைகள், செயல்திட்டம்,  சின்னம் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கவேண்டும். இவர்களை வெற்றியடையச்  செய்யும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நாம் ஒரு படையாகத்  திரண்டு உழைக்க வேண்டும்.

நடக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். நமது உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் உள்ளாட்சிகள் ஒரு முன்மாதிரி  மாடலாக இந்தியா முழுக்க பேசப்படும் காலம் அருகில் வந்துவிட்டது. அந்தந்த பகுதிகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்கி இமைப்பொழுதும் சோர்வடையாமல்  உழையுங்கள். என்னைப் பொருத்தவரை உயர்ந்த நோக்கம், நேர்மை, திறமை,  விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவைதான் ஒருமனிதனை வெற்றியை நோக்கி  செலுத்தும் விசைகள்.  இது முதற்கட்ட பட்டியல்தான். அடுத்தடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தல் களத்தில் வாகை சூட வேட்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.