சென்னை: தமிழ்நாட்டில், 24 மணி நேரமும்  கொரோனா தடுப்பூசி போடும் வசதி 61 இடங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக,  சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.  மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுடன் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மருத்துவ இடங்கள் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்படும் என்றவர், அடுத்த  4 நாட்களில் அதற்கான ஆணை வெளிவரும். என்றார்.

தமிழகத்தில் 75% சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . 23 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு  தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.  தமிழக மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் வகையில்,  தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றவர், தமிழ்நாட்டில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில்,  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மூன்று விதமாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  கொரோனா  பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் வீட்டிலே இருந்தே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது என்றவர், கொரோனா அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அச்சப்படாமல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.