சென்னை: தமிழ்நாட்டில், 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 401 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மட்டுமின்றி ஒமிக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது.  தமிழ்நாட்டில் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறத. இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளன. இந்த முறை பரவி வரும் தொற்றுக்கு முன்களப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன.  மருத்துவர்கள்,  துப்புரவு தொழிலாளர்கள், காவல் துறையினர் போன்றவர்களும் தொற்றின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இநத் நிலையில், தமிழ்நாட்டில் காவல்துறையினர் ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. அதனப்டி,  தமிழகத்தில் 401 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 7 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள். மேலும் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 141 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர்.  இதுவரை கொரோனா 3 அலைகளிலும் சேர்த்து 8,030 காவலர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் இதுவரை 143 காவலர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.