சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும்  சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தான்தான் பொதுச்செயலாளர் என்று கூறி வலம் வந்துகொண்டிருக்கிறார். இதனால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காரசாரமாக விவாதங்களும், மோதலும் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த  கூட்டத்தில் அன்வர் ராஜா, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனக்கூறியதாகவும், அதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அதிமுக இரட்டை தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் அதிமுக எம்.பி.  அன்வர் ராஜாவை ஒபிஎஸ், இபிஎஸ் தலைமை நீக்கி நடவடிக்கை எடுத்துளளது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று  காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், நடைபெற இருக்கும் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் , ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான தீர்மானமும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் இடம்பெறும் என தகவல் வெளியானது.

இதுமட்டுமின்றி, கட்சியின் செயற்குழுவை கூட்ட அதிமுக அவைத்தலைவருகே உரிமை உண்டு என்றும், ஏற்கனவே அவைத்தலைவராக இருந்த மூத்த தலைவர் மதுசூதனன் காலமானதால், புதிய அவைத்தலைவரை தேர்ந்தெடுக்காமல் செயற்குழுவை கூட்ட முடியாது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில், அதிமுக கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு  தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.