சென்னை

யர்நீதிமன்றத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்,  வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

திடீரென நீலகிரி மக்களவை தொகுதியில் உள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து பின்னர் அது சரி செய்யப்பட்டது. மேலும் ஈரோடு, விழுப்புரம் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சிறிது நேரத்திற்கு செயலிழந்து பின்னர் அவை சரி செய்யப்பட்டன.

எனவே இதுசம்பந்தமாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி,  வழக்கறிஞர் எம்எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  மேலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பாதுகாப்பு அறைகளில் நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக விளக்கம் அளிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.