சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்கள் மீது ஏராளமான பாலியல் புகார்கள் வந்துள்ளதாக மாநில பொறுப்பாளரான  சி.டி. ரவி எச்சரிக்கை செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று தீவிரமாக களமிறங்கிய பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் முதுகில் ஏறி சவாரி செய்து, தேர்தலை சந்தித்தது. இதனால் அதிமுக பரிதாபமாக தோல்வியை சந்தித்து, ஆட்சியை இழந்த நிலையில், பாஜகவும் பெரும் தோல்வியை சந்தித்தது. . 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில்தான் வென்றது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எச்.ராஜா உள்ளிட்டோர் படுதோல்வி அடைந்தனர்.

தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதாக  தமிழக பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் சென்னை அருகே நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கூடி  ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான சி.டி. ரவி பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, மாநில பாஜக தலைவர்கள்மீது சிடி ரவி கடுமையான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியதாகவும், பலர்மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக முக்கிய ஒரு தலைவர் மீது 100க்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள் வந்துள்ளது என்று ஆவேசப்பட்டதுடன்,  இனிமேல் கட்சி ஆலோசனைக் கூட்டங்களை நட்சத்திர ஹோட்டல்களில் நடத்த கூடாது;  நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு கூட தங்க கூடாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இதுபோன்ற புகார்கள் இனிமேலும் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை தயங்ககாது என்று என்று எச்சரித்ததுடன், ஒவ்வொருவர் மீதான பாலியல் புகாருக்கும் விரிவான, முழுமையான ஆதாரமும் இருக்கிறது என கூறியவர், உங்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டிதான் அமைக்க வேண்டும் போல என கடுப்படித்துள்ளார்.

சிடி ரவியின் மிரட்டல் பேச்சு பல பாஜக தலைவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளதாம்.

சமீப நாட்களாக தமிழகத்தில் ஏராளமான பாலியல் புகார்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்,, தங்களது பாலியல் சேட்டைகளும் வெளியே வந்துவிடுமோ என்ற பயத்தில் பல தலைவர்கள் கப்சிப் என வாயைப்பொத்திக்கொண்டு அமைதியாக இருந்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ….-?  யாருக்கு தெரியும்….