சென்னை: பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. நடப்பு கல்வியாண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து விதமான பள்ளிகளுக்கும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஒவ்வொரு பள்ளிகளிலும்  மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்ப பள்ளிசாரா வெளிநபர் ஒருவர் என உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

ஒருமாத காலத்தில் மாநில அளவில் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். அனைத்து தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.

மாநில பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகார்களையும் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

இந்த மையத்தில் புகார்களை தெரிவிப்பது மட்டுமின்றி, அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு வழங்கப்படும்

பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலியால் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி தரப்படும்.

பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுயத் தணிக்கை செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு, அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.

புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காக பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு, பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும். புகாரானது எந்த முறையில்(வாய்மொழி உள்பட) பெறப்பட்டிருந்தாலும் இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.