நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூர முறையில் விசாரணை நடத்தியது தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட  காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கத்தை தமிழ்நாடு அரசு ரெத்து செய்துள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது அப்பாவி மக்களை ஈவுஇரக்கமின்றி சுட்டுக்கொல்ல காரணமாக இருந்த, அப்போதைய தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், திமுக அரசுக்கு அவரை டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்துள்ளது. இந்த நிலையில், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடுஞ்செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரியான பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு  உள்ளது.

மக்கள்மீது கொடூரமான நடவடிக்களை மேற்கொண்டு வரும் இதுபோன்ற காவல்துறை அதிகாரிகளை பதவியில் இருந்து அகற்றுவ தற்கு மாறாக, அவர்களுக்கு மேலும் மேலும் பதவி உயர்வு வழங்கி வருவது, திமுக அரசின் எதேச்சதிகார செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  தமிழ்நாடு அரசின் இதுபோன்ற நடவடிக்கை  சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லை பிடுங்கி மிக கொடூரமாக துன்புறுத்தியதாக கடந்தாண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலத்திற்கு, திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்ட தன் பேரில், சேரன்மகாதேவி துணை ஆட்சியர், கடந்த மார்ச் மாதம் தனது விசாரணையை தொடங்கினார்.  அதனைத் தொடர்ந்து பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து கடந்தாண்டு மார்ச் 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். ஏப்ரல் மூன்றாம் தேதி துணை ஆட்சியரின் இடைக்கால விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் பல்வீர் சிங்கின் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு தற்போது அறிவித்துள்ளது. 10 மாதங்களாக பல்வீர் சிங் இடைநீக்கத்தில் உள்ள நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு! திமுகஅரசு நடவடிக்கை..