டெல்லி: கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள எய்ம்ஸ் தலைவர், நாட்டின் மொத்த மக்கள் தொகையில்  5% பேருக்கு  மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து உள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா  தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவத,  நாடு முழுவதும் அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும். தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒவ்வொருவரும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், தற்போது கொரோனா 2வது அலை குறைந்துள்ளதால்,  பெரும்பாலான மாநிலங்கள்  தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதை பார்க்கும்போது,  மாநில அரசுகளும், மக்களும், கொரேனாவின்  முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனால் கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும்போது இந்தியா நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

கொரோனா 3வது அலையின் பாதிப்பு தொடங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த டாக்டர் ரன்தீப் குலேரியா, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதேவேளையில், தடுப்பூசி செலுத்துவது பெரிய சவால் என்று கூறியவர்,  இதுவரை மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 5% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.