டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் பதிவுகள் 100% எண்ணிக்கை தொடர்பான வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில்,  உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்தப் பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்களிக்கும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அதனால், இவிஎம் வாக்குகளுடன், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் விவிபாட்டில் பதிவான வாக்குகளையும் முழுமையாக எண்ணி, சரி பார்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இல்லையேல், பழைய முறைப்படி, வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது. அதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை யாரும் மாற்ற முடியாது என்று கூறி வருகிறது.

இதையடுத்து, வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது தொடா் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினா்.

‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் செயல்பாடுகள் தொடா்பாக அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு தோ்தல் ஆணையம் அளித்துள்ள பதில்களில் சில குழப்பங்கள் உள்ளன. இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கும் சில சந்தேகங்கள் உள்ளன. அந்த சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தோ்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.’ என்று தெரிவித்தனர். தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று (26ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருந்தனர். தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்பு போல இந்த தீர்ப்பும் இருக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

மின்னனு வாக்கு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும்,  சந்தேகத்தின் அடிப்படையில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது என்று கூறியதுடன்,  மற்றொரு அரசியல் சாசன அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்தனர்.