சென்னை: அரசுக்கு சொந்த இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  வழிபாட்டுத்தலங்களை இடிப்பதில் தமிழகஅரசு பாரபட்சம் காட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து கோவில்கள் மட்டுமே அகற்றப்படுவதாக எழுந்த புகாரில், நீதிபதிகள் தமிழகஅரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.

அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை மற்றும் வழிபாட்டு தலங்களை தமிழகஅரசு இடித்து அகற்றி வருகிறது. அதன்படி ஏராளமான இந்து கோவில்கள் மட்டுமே அகற்றப்பட்டு உள்ளன. மற்ற மதத்தினரின் வழிபாட்டு தலங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இது தொடர்பாக டிவிட் பதிவிட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் மீதும் வழக்கு பதிவு செய்து மிரட்டி வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கை  சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிலையில், இந்து முன்னணி அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அவரது மனுவில்,  “தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 927 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகத் தமிழ்நாட்டு அரசு தாக்கல்செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து, 10 ஆயிரத்து 556 ஏக்கர் குடியிருப்புகளும், 1,500 ஏக்கர் வணிக நிறுவனங்களும், 30 ஆயிரத்து 24 ஏக்கர் நிலம் விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 1,311 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் இந்து கோயில்களை மட்டும் அரசு இடித்துவருகிறது. சமீபகாலத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரமாண்டுகள், நூற்றாண்டுகள் பழமையான கோயில்களும் இடிக்கப்படுகின்றன. அதனால், அரசு நிலங்களில் உள்ள கோயில்கள், பிற மத வழிபாட்டுத் தலங்களை முறைப் படுத்தவோ அல்லது மாற்று இடங்களில் அமைக்கவோ உரிய திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்து கோயில்களை மட்டும் இடிக்கப்படுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்களை முறைப்படுத்தவும், மாற்று இடம் ஒதுக்கவும் திட்டம் வகுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், திட்டத்தை வகுக்காமல் கோயில்களை இடிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று கூறியதுடன்,  இந்து கோயில்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற உத்தரவில் நீர்நிலைகள் பற்றி குறிப்பிடவில்லை. இந்து கோயில்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவ தாக எந்த ஆதாரங்களும் இல்லை என்று மறுத்தனர்.  மேலும், இந்து கோயில்களுக்கு எதிராக மட்டும் பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுவை மனுதாரர் தாக்கல்செய்ய வேண்டும். நீர்நிலைகளை, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதில் எந்தப் பாரபட்சமும் காட்டக் கூடாது என்று கூறினார்.

இந்த விவகாரத்தில், குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரியவந்தால் அது அரசுக்குதான் சிக்கல் என்று கூறிய நீதிபதிகள்,  கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை, கடந்த 2003 முதல் 2022 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், கடமை தவறுங்ம  சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

தமிழ்நாட்டில் 200 கோவில்கள் இடிப்பு என பதிவுபோட்ட பாஜக நபர்மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு…