சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 17ம் தேதியை ஒட்டி வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, “தென்னிந்தியப் பிராந்தியத்தில் வளிமண்டலக் கீழடுக்கில் கீழை திசை நோக்கி காற்று வீசத் தொடங்கியுள்ளது.

வட மற்றும் மத்திய இந்தியாவைப் புரட்டிப்போட்ட தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. இதனால், வடகிழக்குப் பருவமழையானது அக்டோபர் 17ம் தேதியை ஒட்டி துவங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணிநேரங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழைப் பெய்யக்கூடும். வடதமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புண்டு. சென்னைப் புறநகர் பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

வடகிழக்குப் பருவமழை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே துவங்கலாம். இந்தாண்டு இயல்பான அளவில் வடகிழக்குப் பருவமழை கிடைக்கும்” என்று தெரிவித்தார்.