சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை  மாநகராட்சியில் மழையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கும் வண்ணம் பிரத்யேக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு உதவி எண் அறிவிப்பு

📞1913  📞044-25619206   📞044-25619207 📞044- 25619208 மற்றும் நம்ம சென்னை செயலி அல்லது ட்விட்டர் மூலம் புகார் அளிக்கலாம்/

சென்னையில் நேற்று இரவு முதல் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது.  பல்வேறு இடங்களில் சாலைகளில்  தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.  தொடர்ந்து,  நகரின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சில சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையை பார்க்க முடிகிறது. மேயர் உள்பட அதிகாரிகள் களத்தில் இறங்கி மழைநீர் வடிகால் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கி நிற்பது, மரம் முறிந்து விழுதல், மின்வெட்டு பிரச்சினை, மின் கசிவு, கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல், குடிநீருடன் கழிவுநீர் கலப்பது உள்ளிட்டவை தொடர்பான புகார்களுக்கு பிரத்யேக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 15 மண்டலங்களுக்கும் தனி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டு அவர்களது போன் எண்களும் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னைவாசிகள் மேற்குறிப்பிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் “நம்ம சென்னை” மொபைல் செயலி மூலமும் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக வடகிழக்கு பருவமழையை ஒட்டி மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் விரைவாக பணிகளை முடிக்காமல் இருந்ததால் அவ்வப்போது பெய்து வந்த மழையால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. சில உயிரிழப்புகளையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து பணிகள் வேகமெடுத்த நிலையில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையானது, பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்காமல் வடிகால்கள் வழியாக ஓடிவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதுப்பேட்டை பகுதிகளில் தெருக்களில் இருந்த மழைநீரை மோட்டார் மூலம் சாலைப் பகுதிகளில் விட்டதாக கூறப்படுகிறது.

இது வாகன ஓட்டிகளை அவதிக்கு ஆளாக்கி வருகிறது. மேலும் அசோக் நகர், காமராஜர் சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை அமைந்திருக்கும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆதம்பாக்கம் பகுதியில் ராமகிருஷ்ணா நகர் மற்றும் என்.ஜி.ஓ காலனி, ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இங்கெல்லாம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரங்கள் முறிந்து விழுந்ததாக இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாஷ் மாநகராட்சி: கொட்டும் மழையிலும் மழைநீர் அகற்றும் பணியில் இரவோடு இரவாக களமிறங்கிய மேயர் பிரியா…

‘நம்ம சென்னை’ செயலியைப் பயன்படுத்த சென்னைவாசிகளுக்கு மாநகராட்சி வேண்டுகோள்…