சென்னை: இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக  பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறினார். அமைச்சரான பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி இவ்வாறு கூறினார்.

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக  இன்று பதவியேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து உதயநிதிக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயிநிதிக்கு அனைத்து கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தஅ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம் அதனை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மேலும்,  இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பெற்ற போதும் விமர்சனங்கள் வந்தன. விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன்.

இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அப்படத்தில் இருந்து விலகிவிட்டேன். மாரை செல்வராஜ் தயாரிக்கும் மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படம்”.

இவ்வாறு கூறினார்.

கவர்னர் பதவி பிரமாணம்: தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்…