காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் விலகுவதாக அறிவித்து உள்ளார்.  குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் விலகியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில்  ஓ.பி.சி பிரிவினருக்காக போராடி உரிமையை பெற்றுத்தந்தவர் ஹ‘ர்திக் பட்டேல். இதனால், அவருக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த  2017ம் நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார்.  தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்து, தீவிர பிரசாரங்கள் மேற்கொண்டார்.  இதையடுத்த அவர்,  2020-ம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் கட்சியிரிடையே தனக்கு மரியாதை இல்லை என்று புலம்பி வந்தார். இதையடுத்து அவருக்கு ஆம்ஆத்மி கட்சி வலைவீசியது. இந்த பரபரப்பான சூழலில், ஹர்திக்  திடீரென தனது டிவிட்டர் பக்கத்தின் பயோ-டேட்டாவிலிருந்து `காங்கிரஸ் செயல் தலைவர்’ என்ற தகவலை அகற்றினார். இதனால், அவர் வேறு கட்சிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளிலும் இருந்து ராஜினாமா செய்வதாக, கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  இன்று நான் தைரியமாக காங்கிரஸ் கட்சியின் பதவி மற்றும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது முடிவை எனது சக ஊழியர்கள் மற்றும் குஜராத் மக்கள் அனைவரும் வரவேற்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னுடைய இந்த நடவடிக்கைக்குப் பிறகு, எதிர்காலத்தில் குஜராத்துக்காக நான் உண்மையிலேயே சாதகமாகப் பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பட்டேல் விரைவில் ஆம்ஆத்மி கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவில் இணையும் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை செருப்பால் அடிக்க வேண்டும்… ஹர்திக் பட்டேல் காட்டம்