1
மதுரை: குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ அளிக்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரை மாவட்டம் கீரைத்துறையில், தனது 15 வயது மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக பத்து லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், நாகரீகமான சமுதாயத்தில், பெற்ற மகளையே தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் மிகவும் கேவலமானது.   இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க அதிகபட்சமாக மரண தண்டனையோ  அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குற்றவாளியின் செயலுக்கு மதுவும் ஒரு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  மதுவிலக்கு கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாத நிலையில் இருக்கிறது. , இதை ஊடகங்களும், பத்திரிகைகளும் விவாதப் பொருளாக்கி சட்டம் இயற்றும் அமைப்புகளிடம் கொண்டு சேர்ப்பதை தங்கள் பொறுப்பாகவும், கடமையாகவும் நினைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுவதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.