சென்னை: தூத்துக்குடி  ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி சைலேஸ்குமார் யாதவ் உள்பட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய கோரி,  கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட பிளஸ்2 மாணவி  ஸ்னோலினின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரியும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவியான  ஸ்னோலினின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக 100 நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் இறுதிநாளான மே 22ம் தேதி மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த தடுக்கும் நடவடிக்கையில்,  நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில்  மாணவி ஸ்னோலின் மற்றும் ஒரு பெண் உள்பட  13 பேர்  அநிநாயகமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதில், 12-ம் வகுப்பு மாணவி  ஸ்னோலின்  வாயில் சுடப்பட்டு  பரிதாபமாக உயிரிழந்தாள். அவரை குறிபார்த்து சுட்ட காவலரின் மனநிலை மிகவும்  கொடூரமானது எனப் பல தலைவர்களும் அரசுக்கு எதிராகக் கொந்தளித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு மே 18ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான அப்போதைய தென்மண்ட ஐஜி சைலேஷ் குமார் யாதவ் உள்பட  17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அரசாணை பிறப்பித்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் உள்பட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பதவி உயர்வு வழங்கி  திமுக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தூத்துக்குடி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திமுக அரசு வெளியிட்டுள்ள   அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது இளம் பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஐந்து ஆண்டுகள் காத்திருந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக அரசு, இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்”என மனுவில் கோரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா  நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

கொலைகாரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நடவடிக்கையை  கண்டிக்க முன்வராத நீதிமன்றம், எந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்க வேண்டுமோ அதை விசாரிக்க முன்வராத நீதிமன்றங்கள், அரசியல் வழக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு! திமுகஅரசு நடவடிக்கை..