சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி,  12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 75ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,546 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 3 திருநங்கைகளும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ந்தேதி தொடங்கி பிப்ரவரி 4ந்தேதியுடன்  முடிவடைந்தது.  இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. காலை  10 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்குகிறது.

இந்த நிலையில், 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.  கடைசி நாளான நேற்று  ஒரேநாளில் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ம் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு 3,546 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 1696 பேர்  ஆண்கள், 1847 பெண்கள், 3 திருநங்கை களும் அடங்குவர். கடைசி நாளான நேற்று மட்டும் 2112 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்!

வேட்புமனு பரிசீலனையின்போது, அதிகாரிகள்  சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளிக்காமல், நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவுசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேட்புமனுக்களை திரும்பப் பெற 7-ம் தேதி கடைசி நாள்.  சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அன்றே ஒதுக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.