சென்னை: கேரள சட்டமன்றத்தில் உரையாற்றிய கேரள மாநில ஆளுநர் முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ள நிலையில், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். புதிய அணை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கேரள சட்டமன்றத்தில் இன்று (18.02.2022) கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது.  இது 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது.  புதிய அணை தேவையில்லை. மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாக கூறியுள்ளது.

இப்படியிருக்க கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இதை எல்லாவிதத்திலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும். தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காது.

  இவ்வாறு தெரிவித்துள்ளார்.