கோவை: கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கோவையில் வெளி மாவட்டங்களை  சேர்ந்த நபர்கள் வெளியேற்றப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுமீது காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ நடவடிக்கை எடுக்காத நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கண்காணிப்பு பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தவும், தேர்தல் பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து கோவையில் வந்து தங்கியிருப்போரை வெளியேற்றவும், அதிமுகவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்யவும் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலையில் இருந்து போராட்டத்தில் உள்ள அவர்களிடம்  போராட்டத்தை கைவிட அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அது தோல்வியில் முடிந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர்.

இதனால், அவர்கள்  தரையில் படுத்துக் கொண்டு  தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிச் சென்றனர்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்….