பெங்களூவில், பெருமுதலாளிகளான டாடா குழுமத்தின் ரத்தன் டாடா போன்ற புகழ்பெற்ற பிரமுகர்கள், பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால், மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெட் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆகியோர் முதலீடு செய்து தொடங்கியுள்ள புதிய தனியார் விண்வெளி நிறுவனமான டீம் இண்டஸ், இந்திய மக்களுக்கு “ருபாய் 500 கட்டணம் செலுத்தினால், நிலாவில் தங்கள் பெயரினை பொறிக்கலாம் எனும் ஒரு சலுகையை அறிமுகப்படுத்துள்ளது.

டீம் இண்டஸ் தங்கள் நிறுவனத்திற்கு வருவாய் அதிகப்படுத்தித் தமது வின்வெளித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக இந்தச் சலுகையினை அறிவித்துள்ளது. இவர்களின் விண்கலம் நிலாவில் தரை இறங்கும்போது, ஒரு அலுமினியத் தகட்டில் பெயர் பொறிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் வைக்கப்படும்.

தனியார்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் விதமாகக் கூகுள் நிறுவனம், 2007ம் ஆண்டு லூனார் எக்ஸ்பிரைஸ் எனும் திட்டத்தை ஆரம்பித்தது. அமெரிக்காவின் நாசா அனுப்பிய அபொல்லொ விண்கலம் நிலாவில் தரை இறங்கிய இடத்தில் மீண்டும் தரை இறங்கி அந்த இடம்குறித்த கூடுதல் தகவல் தரும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது.

டீம் இண்டஸ் நிறுவன இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் ஜூலியஸ் அம்ரித் கூறுகையில், “எங்கள் திட்டத்தின் மொத்த செலவு சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதுவரை 15 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபருக்குள் மீதமுள்ள தொகையைச் சேர்க்க வேண்டும்” என்றார்.
டீம் இண்டஸ் நிறுவன இயக்குனர் ஜூலியஸ் அம்ரித், இந்தத் திட்டத்தின் அவசியம் குறித்து கூறுகையில், “இந்தியாவால் கண்டிப்பாக வின்வெளித் துறையில் மேலும் பல சாதனைகளை நிச்சயம் நிகழ்த்த முடியும். எங்கள் லட்சியத்தை அடைவதற்கான நிதி ஏற்கனவே திரட்டப்பட்டு விட்டது. எனினும், கூடுதல் வருவாயிற்காக, இந்த “500 ரூபாயிற்கு நிலவில் பெயர் பொறிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்திய ஐ.எஸ்.ஆர்.ஓ வின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் உதவியுடன், எங்கள் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். இது நிலவு குறித்த பல கூடுதல் தகவல்களைப் பெற உதவும்”, எனத் தெரிவித்தார் .