சென்னை:  ஜனவரி 15ந்தேதி மதுரை  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி,  புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில்ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை.

அதன்படி,  அரசு சார்பில் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் 15ம் தேதி பொங்கல் நாளில் நடைபெறுகிறது. 16ம் தேதி பாலமேடு, 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடக்க இருக்கின்றன. அரசு சார்பில் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தொடங்கின. பாலமேடு, அலங்காநல்லூரிலும் வாடிவாசல், கேலரிகள் அமைப்பதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் தகுதியான காளைகளை தேர்வு செய்வதற்கான காளைகள் முன்பதிவு, மருத்துவப் பரிசோதனை விரைவில் தொடங்க இருக்கிறது. பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் நிரந்தரமாகவே உள்ளது. அதனால், வாடிவாசலையும், கேலரிகள் அமைப்பதற்கான இடத்தையும் தயார்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி நடக்கின்றன. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிப்பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கார், பைக், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிப்பெறும் வீரர், காளைகளுக்கு வழங்கப்படும் தங்க நாணயங்கள், பீரோ, கட்டில், வாஷிங் மிஷின், மிக்ஸி போன்ற பல்வேறு பரிசுகள் இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளன.  இதனால், காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். அதேபோல், மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி பெற்று வருகின்றனர்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும், பார்வையாளர்களுக்கான வசதிகளையும், பாதுகாப்பையும் செய்து கொடுப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் கடந்த 23-ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாநகராட்சி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் வருவாய்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இதைத்தொடர்ந்து

பார்வையாளர்கள் அமருவதற்கான பாதுகாப்பான கேலரிகள், கழிப்பறை, குடிநீர் வசதிகள் , காயமடைந்தால் முதலுதவி சிகிச்சை வழங்குவதற்கான தற்காலிக மருத்துவமனைகள், மருத்துவக்குழுவினர் நியமிக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் பகுதிகளில், சிசிடி காமிராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் போட்டிளை கண்காணக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

2024ம் ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6ந்தேதி தொடங்குகிறது…