டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நள்ளிரவு ஏற்பட்ட  6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத் காரணமாக, அதன் தாக்கம் டெல்லி உள்பட இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வட பகுதிகளான டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது. வீடுகளில் உள்ள பொருட்கள் ஆடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

டெல்லியின் ஜாமியா நகர், லால்பாத்நகர், கான் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு காரணமாக சில கட்டங்களில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காசியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டடங்கள், வீடுகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் உடனடியாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் 2 பேர் உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் காயமடைந்துள்ளனர். அபோதாபாத் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை போக்குவரத்து முடங்கியது.