டெல்லி:
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 18ந்தேதி தொடங்க உள்ள நிலையில் வரும் 17ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்குகிறது.
பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றப் பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 17ம் தொடங்கி ஆகஸ்ட் 7ம் தேதிவரை நடைபெற்றது. அதையடுத்து குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடி விவாதித்தது.
அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 18-ம் தேதி முதல் சுமார் 1 மாத காலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், வரும் 17ந்தேதி அனைத்துக்கட்சி எம்.பி.க்களின் கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கூட்டத்தொடரின்போது, நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதுடன், உள்நாட்டு கம்பெனி களுக்கான கார்ப்பரேட் வரிக்குறைப்பு, மின்சார சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிப்பு இரண்டு முக்கிய அவசர சட்டங்களை சட்டமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும் என தெரிகிறது.