சென்னை:

ரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை தெரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள 21 நாள் ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், இந்தியாவில், டெல்லி தப்லிகி இஸ்லாமிய மாநாட்டுக்கு பிறகு கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது.  குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லியில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கை மேலும் நீட்டிக்க பல மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வரும் பிரதமர், நாளை மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதைத்தொடர்ந்து, நாளை மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,  ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று நம்புவதாக கூறினார்.