டெல்லி:  ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க தொடர்ப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

வங்கக்கடலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மண்திட்டு, ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மத்தியஅரசு சார்பில்,  இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனமாக பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாதிட்ட மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்போம் என மத்திய அரசு உறுதியளித்ததாகவும், தற்போது இழுத்தடிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த அமைச்சரையோ, அதிகாரியையோ பார்க்க விரும்பவில்லை எனக்கூறிய அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் பாலம் விவகாரம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது,  மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ராமர் சேது தொடர்பான சுவாமியின் மனு மீது விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும்,  (திரு. சுவாமி) பிரதிநிதித்துவம் செய்தால், நாங்கள் (ராம் சேதுவை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பது குறித்து) உடனடியாக முடிவெடுப்போம்,” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த பதிலை ஏற்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரப்படும் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.  அதே வேளையில், இந்த விவகாரத்தில் மனுதாரர் ஏதேனும் நிவாரணம் கோர விரும்பினால் நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் எனவும் அறிவுறுத்தினர்.