நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

”18 வருடங்களாக நண்பர்களாக, இணையர்களாக, பெற்றோராக, ஒருவொருக்கொருவர் நலம் விரும்பிகளாக நாங்கள் இணைந்திருந்தோம். இந்தப் பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்பதாக இருந்தது. இன்று நாங்கள் எங்களுடைய பாதையில் பிரிந்து செல்லவேண்டிய இடத்தில் நிற்கிறோம். எங்கள் சூழலை புரிந்துகொள்ளுங்கள்” என பதிவிட்டு இருந்தனர்.

இவர்களது விவாகரத்து முடிவை மாற்ற வைக்க உறவினர்கள் தரப்பில் முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், ‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

– டி.வி. சோமு