வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்த வெற்றிப்படம் ‘மாநாடு’. இதைத் தொடர்ந்து அவர் தயாரிக்கும் புதிய படத்தை ராம் இயக்குகிறார்.

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களை அளித்த இயக்குநர் ராம் இயக்கிவரும் இந்த புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படத்தில் தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.

‘ரிச்சி’ படத்தைத் தொடர்ந்து அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் இரண்டாவது படம் இது.

படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி இணைந்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்.

படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.

தற்போது சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

‘மாநாடு’ படத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கலை இயக்குநர் உமேஷ், இந்த படத்திற்காக அழகிய ரயில் செட்டை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

கும்மிடிப் பூண்டி அருகே அமைந்துள்ள “ஏ ஆர் ஆர் ஃபிலிம் சிட்டி” படப்பிடிப்புத் தளத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இன்று எதிர்பாராத வருகை தந்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

மேலும் இயக்குநர் ராம், நிவின்பாலி மற்றும் சூரி உள்ளிட்ட படக்குழுவினருடன் உரையாடி படப்பிடிப்புத் தளத்தை தனது வருகையால் கலகலப்பாக்கினார் இயக்குநர் மிஷ்கின்.

அப்போது அவர், “நிஜமான ரயில் போலவே இருக்கிறது. போகாத ஊருக்கு ஜாலியாக பேசி சுவாரஸ்யமாக பயணம் செய்வது நாமாகத்தான் இருக்கும்!” என்று ஆச்சரியப்பட்டு கூறினார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி
இயக்கம் ; ராம்
இசை ; யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு ; ஏகாம்பரம்
கலை ; உமேஷ் ஜே குமார்
மக்கள் தொடர்பு ; A. ஜான்

– டி.வி. சோமு