சென்னை: வடசென்னையின் முக்கிய பகுதியில் 2 நாளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாகவும், முன்னெச்சரிக்கையாக தண்ணீரை சேமித்துக் கொள்ள  சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதியில் 2 நாளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என சென்னைக் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1000 மி.மீ விட்டமுள்ள பிரதான குழாயில் 23.02.2023 அன்று காலை 8 மணி முதல் 25.02.2023 அன்று காலை 8 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து குடிநீரை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.