சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 65அடியை எட்டியுள்ளது.

நடப்பாண்டு சம்பா பயிரிட போதுமான அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் இல்லாததாலும்,  காவிரில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வந்ததால், போதிய நீரின்றி சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது.  இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் கடந்த அக்டோபர் 10ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.  மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்ததால் அணையில் இருந்து நீர் வெறியேற்றப்படு வது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது வினாடிக்கு 4,072 கனஅடி தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 431 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 64.64 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 65.04 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 28.58 டி.எம்.சி.யாக உள்ளது.