சென்னை: திருவாரூர் பகுதியில் திடீர் மின் தடை ஏற்பட்டதால், அங்குள்ள அரசு மருத்துவமனையில்,  வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த அஜாக்கிரதைக்கு பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நகர்புறங்களில் சில நேரங்களில் மட்டுமே  மின்தடை ஏற்படும் நிலையில் பல கிராமங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான்  கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருவாரூர் பகுதியில் ஏற்பட்ட மின்தடையால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மருத்துவமனையில் போதிய ஜெனரேட்டர் வசதி இல்லாத நிலையில்,  திடீர் மின் தடையால் வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாமக தலைவர்,  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின்தடையால், அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் (வெண்டிலேட்டர்கள்) செயலிழந்ததில், நுரையீரல் தொற்றுக்காக மருத்துவம் பெற்று வந்த அமராவதி என்ற பெண் நோயர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்க நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றைக் கடந்து மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை வழங்கக்கூடியவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகும். அவற்றின் அவசர சேவைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால், அங்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டது மட்டுமின்றி, மாற்று ஏற்பாடுகளும் செயலிழந்து விட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. மருத்துவத்துறையில் தமிழ்நாடு வளர்ந்து விட்டதாக நாம் பெருமை பேசி வரும் நிலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது பெரும் அவலம் ஆகும்.

மின்சாரத் தடையால் நோயாளி உயிரிழந்ததை விடக் கொடுமை, அதை மூடி மறைக்க நடைபெறும் முயற்சிகள் தான். மின்சாரம் தடைபடவில்லை; மருத்துவமனையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார வினியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தான் இதற்கு காரணம் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மருத்துவமனையின் முதல்வரோ, மின் தடை ஏற்பட்டாலும் பேட்டரி உதவியுடன் செயற்கை சுவாசக் கருவிகள் இயங்கின; அதனால், நோயாளியின் உயிரிழப்புக்கு மின் தடை காரணமல்ல என்று கூறி அனைத்தையும் மூடி மறைக்க முயல்கிறார். இவற்றில் எது உண்மை எனத் தெரியவில்லை.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு வளர்ந்து நிற்கும் சூழலில் மின் தடையால் நோயாளி இறந்தார் என்பது உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் அவப்பெயரை பெற்றுக் கொடுக்கும். மருத்துவமனையில் நடந்த குளறுபடிகள், நோயாளியின் உயிரிழப்பு, அதற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காத அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி அமராவதி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.