சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இது அவரது ரசிகர்களுக்கும், தேமுதிகவினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே  இருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில்,   கடந்த நவம்பர்  18ம் தேதி விஜயகாந்துக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர்  விஜயகாந்த்தை சென்னையில் உள்ள  மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இடையில் திடீரென மியாட் மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில்  விஜயகாந்த்   உடல்நிலை சீராக இல்லை நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும், மேலும் 14 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், இதனை பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்து வீடியோ வெளியிட்டிடிருந்தார்.  மேலும், விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களும் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஜயகாந்த் உடல்நலம் தேற வேண்டும் என அவரது கட்சியினர், ரசிகர்கள்  கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வந்தனர்.

இத ந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல் நலம் தேறியுள்ள நிலையில் மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 7ந்தேதி)  இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.