ஞானபீட விருது பெற்ற பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. மலையாளி அல்லாத ஒரு படைப்பாளிக்கு ஓ.என்.வி. விருது கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் இவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுடன் பல பெண்ணியவாதிகளும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து ட்வீட் செய்தனர்.

இதையடுத்து வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது.

இதனால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும், அதனால் அந்த விருதை திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.