டில்லி:

23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுள்ள வைகோ, இன்று.  பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்தது என வைகோ கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக ஆதரவுடன் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் எம்.பி.யாக பதவி ஏற்ற நிலையில்  இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர் வைகோ. மோடியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இன்று மோடியை வலியச்சென்று சந்தித்து பேசியிருப்பது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

மோடியுடனான சந்திப்பு குறித்து பேசிய வைகோ,  பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது அரசையும் நான் கடுமையாக விமர்சித்து வருபவன். ஆனாலும் அவரை சந்தித்தபோது என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு மகிழ்ச்சியான தருணம் என்றார்.

நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள். ஆனாலும் அதைத் தான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று  மோடி தன்னிடம் கூறியதாக தெரிவித்த வைகோ, மோடியிடம் தான்,  கொள்கையின் அடிப்படையில் இவ்வாறு செயல்படுவதாக நான் தெரிவித்தேன் என்று விளக்கினார்.

மேலும்,  பிரதமரிடம் 3 வி‌ஷயங்களை நான் எடுத்து கூறியதாக தெரிவித்தவர்,  நில ஆர்ஜித சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு,  ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்களை போலி என்கவுண்டர் மூலம் கொன்ற விவகாரம், நதிகள் இணைப்பால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கான தீர்வு போன்ற விவகாரங்கள் பற்றி அவரிடம் பேசினேன் என்றம் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழீழ  பிரச்சினை உள்பட சில வி‌ஷங்களை பற்றியும் விவாதித்தோம். ஆனால் அதைப்பற்றி இங்கு சொல்ல முடியாது. ஆனாலும் அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்தது.

இவ்வாறு, வைகோ  கூறினார்.