சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முழுமையான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முழுமையான விரிவான தகவல், மாநில தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 21 மாநகராட்சி, 12 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளை திமுக முழுமையாக கைப்பற்றி உள்ளது.

தமிழ்நாட்டில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்றது. அதன்படி, தமிழ்நாட்டில்  உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளைச் சேர்ந்த  12,602 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடை பெற்றது.   அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகள் பதிவாகியுள்ளது மாநகராட்சிகளில் 52.22%, நகராட்சிகளில் 68.22% வாக்குகளும் பதிவு தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் 74.68% வாக்குகள் பதிவு சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று  (22ந்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 1374 வார்டுகளில், 1373 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 21 மாநகராட்சிகளையும் திமுக மொத்தமாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

திமுக மட்டும் 952 வார்டுகளை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 164, காங்கிரஸ் 73, மார்க்சிஸ்ட் 24, பாஜக 22, மதிமுக 21, விசிக 16, சிபிஐ 13, முஸ்லீம் லீக் 6, பாமக 5, அமமுக 3, எஸ்டிபிஐ 1 வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் நடைபெற்ற 138 நகராட்சிகளில் 3843 வார்டுகள் உள்ளன. இவற்றில்  3842 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 12 மாவட்டங்களில் உள்ள நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளை முழுமையாக திமுக கைப்பற்றி உள்ளது.

திமுக மட்டும் 2360 இடங்களை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 638, காங்கிரஸ் 151, பாஜக 56, பாமக 48, சிபிஎம் 41, மதிமுக 34, அமமுக 33, விசிக 26, முஸ்லீம் லீக் 23, சிபிஐ 19, தேமுதிக 12, எஸ்டிபிஐ 5, பகுஜன் சமாஜ் 3, மமக 4, ஐஜேகே 2 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் நடைபெற்ற 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள  7621 வார்டுகளில்,  7603 இடங்களுக்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக மட்டும் 4,388 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 1206,  காங்கிரஸ் 368,  பாஜக 230,  சிபிஎம் 101,  பாமக 73, அமமுக 66, விசிக 51, மதிமுக 34, சிபிஐ 26, தேமுதிக 23, எஸ்டிபிஐ 16, மமக 13, முஸ்லீம் லீக் 12, நாம் தமிழர் 6, புதிய தமிழகம் 3, மார்க்சிஸ்ட் (மா.லெ) 1, ஐஜேகே 1, என்சிபி 1, பகுஜன் சமாஜ் 1, மஜக 1, தமமுக 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முடிவு தொடர்பான முழுமையான விவரங்களை பெற கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்…

https://tnsec.tn.nic.in/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மூலம் 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகர் மன்ற தலைவர்கள், 138 நகர் மன்ற துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி மன்றத் தலைவர்கள், 490 பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என 1,298 பதவிகளுக்கானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களில் இருந்து ஒருவரையே பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய அந்த மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பார்கள்.

மறைமுகத் தேர்தல் என்பது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இடங்களில் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் அனைத்து தரப்பிலும் உள்ளது. குதிரை பேரம், பண பலம் கொண்டவர்கள் தேர்தலில் வெற்ற பெற்ற கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் சம்பவங்களும் நடக்கலாம் என்பதால்,தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கட்சியின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். அதற்கும் மேல், நடக்கும் வேடிக்கைகளை பொருத்திருந்து பார்ப்போம்.