சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021 நடைபெற உள்ளதையொட்டி,  அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு  26ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என ஒபிஎஸ், இபிஎஸ் அறிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக, அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கி ணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021 கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடம் இருந்து விருப்ப மனுக்களை  பெறலாம் என்று அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியில்,  “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள்,

வருகின்ற 26.11.2021 முதல் 28.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

இதில், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள் மட்டும், தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் மூலம் தலைமைக் கழகத்தில் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.அதன்படி,

மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் – விண்ணப்பக்கட்டணம் ரூ.5,000.

நகர மன்ற வார்டு உறுப்பினர் -விண்ணப்பக்கட்டணம் ரூ.2,500

பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் – விண்ணப்பக்கட்டணம் ரூ.1,500 ஆகும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதனை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். அதே போல்,கொரோனா தடுப்புநடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்”,.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.